லைகா நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் நடிகர் விஷாலுக்கு 2 வாரங்கள் அவகாசம்..!!
 

 

2004-ம் ஆண்டு வெளியான ‘செல்லமே’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் விஷால். அதனைத் தொடர்ந்து சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி போன்ற பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர், ‘விஷால் பிலிம் பேக்டரி’ என்ற படத்தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். நடிகர் விஷால் தனது தயாரிப்பு நிறுவனத்தின் படத்தயாரிப்புக்காக, பிரபல பைனான்சியர் அன்புச்செழியனிடம் ரூ.21.29 கோடி கடன் பெற்றிருந்தார். இந்த கடன் தொகையை அவருக்காக லைக்கா நிறுவனம் ஏற்றுக்கொண்டு செலுத்தியது.

விஷால் மீண்டும் இப்பணத்தை லைக்கா நிறுவனத்திற்கு தரும் வரை விஷால் பட நிறுவனத்தின் அனைத்து பட உரிமைகளும் லைக்கா நிறுவனத்திற்கு வழங்குவதாக ஒப்பந்தம் செய்து கொண்டனர். ஆனால் ஒப்பந்தம் அடிப்படையில் விஷால் நடந்து கொள்ளாமல், வீரமே  வாகை சூடும் என்ற படத்தை தமிழில் உள்ள பிற மொழிகளை வெளியிட முற்பட்டது. இதன் உரிமைகளை தடைவிதிக்க வேண்டும் என்று லைக்கா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு தொடர்பாக பணம் ஏன் கொடுக்க வில்லை என்ற நடிகர் விஷாலின் விளக்கத்தையும், அவரது சொத்து விவரங்களையும் கொண்ட பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, அடுத்த கட்ட விசாரணையை செப்டம்பர் 9-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். அன்றைய தினம் நடிகர் விஷால் மீண்டும் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ஆனால் விஷால் நேரில் ஆஜராகவில்லை. விஷால் தரப்பு வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் விஷாலின் சொத்து விவரங்கள் தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மேலும் 2 வாரம் அவகாசம் வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம் சொத்து விவரங்களை தெரிவிக்க மேலும் 2 வாரங்கள் அவகாசம் வழங்கி உத்தரவிட்டது. இந்த வழக்கு தொடர்பாக அடுத்த விசாரணை வரும் 23-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டது.