எர்ணாகுளத்தில் உள்ள பிரபல கோவிலுக்குள் நுழைய நடிகை அமலா பாலுக்கு அனுமதி மறுப்பு..!! 

 

2009-ல் வெளியான ‘நீலதாமரா’ படத்தின் மூலம் மலையாள சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நடிகை அமலா பால். அதனைத் தொடர்ந்து, 2010-ல் வெளியான ‘வீரசேகரன்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன்பின் சிந்து சமவெளி, மைனா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மைனா படத்தில் மலைவாழ் கிராமத்தில் வாழும் அழகிய பெண்ணாக இவர் வந்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். அதனைத் தொடர்ந்து தெய்வத்திருமகள், தலைவா படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

தெய்வத்திருமகள் படத்தின் படப்பிடிப்பின் போது ஏ.எல்.விஜய் மற்றும் அமலாபால் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. பின்னர் 2014-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு மனமுவந்து பிரிவதாக இருவரும் அறிவித்து பிரிந்து விட்டனர். மலையாளம், தெலுங்கு, தமிழ் என நடித்துவரும் அமலாபால் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ளார்.

கடைசியாக அமலா பால் நடிப்பில் ‘கடாவர்’ படம் வெளியானது. இப்படத்தை நடிகை அமலா பாலே தயாரித்திருந்தார். தற்போது மலையாளம், இந்தி என 4 படங்களில் நடித்து வருகிறார் அமலா பால். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தலைப்புச் செய்தி ஆகியிருக்கிறார் நடிகை அமலா பால். அதாவது கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள திருவைராணிக்குளம் மகாதேவர் கோவிலுக்குள் செல்ல தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக நடிகை அமலா பால் குற்றம் சாட்டியுள்ளார்.

மத பாகுபாடு காரணமாக அதிகாரிகள் அனுமதி மறுத்ததாக நடிகை அமலா பால் குற்றம் சாட்டியுள்ளார். நடிகை அமலா பால திங்கட்கிழமை கோயிலுக்குச் சென்றபோது, அவருக்கு கோவில் அதிகாரிகளால் தரிசனம் மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கோவிலுக்குள் இந்துக்களை மட்டுமே அனுமதிக்கும் பழக்கவழக்கங்களை மேற்கோள் காட்டி தனக்கு தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் கோவிலுக்கு எதிரே உள்ள சாலையில் இருந்து அம்மனை தரிசனம் செய்யும்படி கோவில் நிர்வாகிகள் தன்னை கட்டாயப்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.

கோவிலின் பார்வையாளர்கள் பதிவேட்டில் அமலா பால் தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் ‘அம்மாவைக் காணாவிட்டாலும் அதனை உணர்ந்தேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் 2023ம் ஆண்டில் கூட மதப் பாகுபாடு இன்னும் நிலவுகிறது என்பது வருத்தமும் ஏமாற்றமும் அளிக்கிறது. என்னால் தேவியின் அருகில் செல்ல முடியவில்லை, ஆனால் தூரத்திலிருந்து அந்த ஸ்பிரிட்டை உணர முடிந்தது. மதப் பாகுபாடுகளில் விரைவில் மாற்றம் வரும் என்று நம்புகிறேன். நேரம் வரும், நாம் அனைவரும் மதத்தின் அடிப்படையில் அல்ல, சமமாக நடத்தப்படுவோம்" என்று அமலா பால் கோவில் பார்வையாளர் பதிவேட்டில் எழுதியுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள கோவில் நிர்வாகிகள், கோவில் அதிகாரிகள் ஏற்கனவே உள்ள நெறிமுறைகளை மட்டுமே பின்பற்றுவதாகக் தெரிவித்துள்ளார். இதனிடையே இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள கோவில் அறக்கட்டளை நிர்வாகி பிரசூன் குமார், பிற மதத்தை சேர்ந்த பக்தர்கள் பலர் கோவிலுக்கு வருகை தந்துள்ளனர், ஆனால் அது யாருக்கும் தெரியாது. ஆனால், ஒரு பிரபலம் வந்தால் அது சர்ச்சையாகி விடுகிறது என தெரிவித்துள்ளார். அமலா பாலுக்கு மதத்தை காரணம் காட்டி கோவிலில் அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.