நடிகை ரோஜா கின்னஸ் சாதனை..!!

 

1990-களில் தமிழ், தெலுங்கு, கன்னட திரையுலகில் கனவுக் கன்னியாக வலம் வந்த நடிகை ரோஜா, இயக்குநர் ஆர்.கே.செல்வமணியை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் சின்னத்திரை வெள்ளித்திரைகளில் அவ்வப்போது தலைகாட்டி வந்தார்.

இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு கட்சிக்காக தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் அவருக்கு நகரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு வெற்றியும் பெற்றார். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஆந்திர மாநில அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டபோது  அவருக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டு துறை அமைச்சர் பதவி வழங்கபட்டது.

இந்நிலையில், கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்காக அமைச்சர் ரோஜாவை ஒரே நேரத்தில் 3 ஆயிரம் பேர் போட்டோ எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி ஆந்திரா, தெலுங்கானாவை சேர்ந்த 3 ஆயிரம் போட்டோகிராபர்கள் நேற்று விஜயவாடாவில் உள்ள தனியார் மண்டபத்தில் குவிந்தனர்.

இதையடுத்து அமைச்சர் ரோஜா திருமண மண்டபத்திற்கு வெளியே அமைக்கப்பட்டு இருந்த மேடையில் ஏறினார். அவரை சுற்றிலும் 3 ஆயிரம் போட்டோகிராபர்கள் நிற்கவைக்கப்பட்டனர். ஒன் கிளிக் ஆன் சேம் டைம் என்ற அர்த்தத்தில் ஒரே நேரத்தில் 3 ஆயிரம் போட்டோகிராபர்களும் அமைச்சர் ரோஜாவை போட்டோ எடுத்தனர்.

உலகத்தில் இதுவரை யாரும் பெண் அமைச்சர் ஒருவரை ஒரே நேரத்தில் 3 ஆயிரம் போட்டோகிராபர்கள் போட்டோ எடுக்கவில்லை. இதையடுத்து ‘வொண்டர் புக் ஆப் ரெக்கார்ட்’ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். இதையடுத்து அமைச்சர் ரோஜாவுக்கு கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.