#BIG NEWS:-பிரபல இயக்குநரும், நடிகருமான பிரதாப் போத்தன் காலமானார்..!

 
பிரபல இயக்குநரும், நடிகருமான பிரதாப் போத்தன் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது வயது 70.

கடந்த 1952-ம் ஆண்டு, திருவனந்தபுரத்தில் வணிக குடும்பத்தில் பிறந்த பிரதாப் போத்தன், ஐந்து வயதில் ஊட்டியில் உள்ள உறைவிடப் பள்ளிக்குச் சென்று கல்வியைத் தொடர்ந்தார். அவருக்கு 15 வயதாக இருந்தபோது அவரது தந்தை இறந்தார்.

பின்னர், சென்னையில் உள்ள மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியில்  படித்து பட்டம் பெற்றார். அவரது நண்பர்கள் அவருக்கு நாடகங்களில் நடிக்க உதவினர். இதைத்தொடர்ந்து, அவர் திரையுலகில் கால் பதித்தார்.

பிரதாப் போத்தன், ‘வறுமையின் நிறம் சிவப்பு’, ‘பன்னீர் புஷ்பங்கள்’, ‘அழியாத கோலங்கள்’ உட்பட 100-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். அத்துடன் மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.

சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது, சிறந்த அறிமுக இயக்குநர் படத்திற்கான இந்திரா காந்தி விருது, கேரள மாநில திரைப்பட விருது உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார் பிரதாப் போத்தன்.

இந்நிலையில், உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள வீட்டில் பிரதாப் போத்தன் இன்று காலை திடீரென காலமானார். அவரது மறைவு தமிழ்த் திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அவரது மறைவுக்கு நடிகர்கள், இயக்குநர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

வயது முதிர்வு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.