சென்னை திரும்பிய இளையராஜாவுக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு..!!

 

அமெரிக்காவில் பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்க இளையராஜா சென்றிருந்த நிலையில், அமெரிக்காவில் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு சென்னை திரும்பிய அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் பாஜக சார்பில் வானதி ஸ்ரீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தொண்டர்கள் கூடிநின்று இளையராஜாவை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

மேலும் இயக்குனர் பாரதிராஜா, கங்கை அமரன், ஆர்.கே.செல்வமணி, சினிமா இசைக்கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் ஆகியோர் இளையராஜாவை வரவேற்று மகிழ்ந்தனர்.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். புதிதாக அறிவிக்கப்பட்ட நியமன எம்.பி.க்களில் சிலர் நேற்று பதவி ஏற்றுக் கொண்டனர்.

அமெரிக்காவில் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமல் போனது. இதனால் நடைபெற உள்ள பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இளையராஜா நியமன எம்.பி.யாக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாநிலங்களவையில் 12 எம்.பி.க்கள் குடியரசுத் தலைவரால் நேரடியாக நியமனம் செய்யப்படுகிறார்கள். அதன்படி கலை மற்றும் விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. அந்த வகையில், இசைஞானி இளையராஜா, தடகள வீராங்கணை பி.டி.உஷா, திரைக்கதை ஆசிரியர் விஜயேந்திர பிரசாத் (இயக்குநர் ராஜமவுலியின் தந்தை) சமூக செயற்பாட்டாளர் வீரேந்திர ஹெக்டே ஆகியோரை மாநிலங்களவைக்கு நியமன எம்.பி.க்களாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேர்வு செய்து கடந்த 6-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டார்.