முன்னாள் கணவர் மீது பிரபல நடிகை பரபரப்பு புகார்..!!

 

பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த். பிக்பாஸ் 15-வது சீசனில் கலந்துகொண்டபோது தன் கணவர் என்று கூறி ரிதேஷ் என்பவரை அறிமுகப்படுத்தினார். ரிதேஷ் பிக்பாஸ் சீசன் 14-ல் கலந்து கொண்டவர். 15-வது சீசனிலும் வந்தவர் தங்களது திருமணத்தை உறுதி செய்தார்.

ஆனால் கடந்த பிப்ரவரி மாதம் தன் கணவர் தன்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டதாக ராக்கி சாவந்த் தெரிவித்தார். அதனால் என் கணவரை நானும் பிரிந்துவிட்டேன் என்றும் குறிப்பிட்டிருந்தார். அதன் பின்னர், அடில் கான் துர்ரானி என்ற தொழிலதிபரைக் காதலித்து வருகிறார். இருவரும் ஒன்றாக மும்பையில் வசித்து வருகின்றனர். நடிகை ராக்கிக்குப் புதிய பிஎம்டபிள்யூ காரை துர்ரானி பரிசளித்துள்ளார். துபாயில், அவர் பெயரில் ஒரு வீட்டையும் வாங்கியுள்ளார்.

இந்நிலையில் நடிகை ராக்கி சாவந்த், தனது முன்னாள் கணவர் ரிதேஷ் மீது மும்பை ஓஷிவாரா காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, “நாங்கள் ஒன்றாக இருந்தபோது, ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட என் சமூகவலைதளக் கணக்குகளை ரிதேஷ் கையாண்டார். என் ஜிமெயில், கூகுள் பே, பேடிஎம் கணக்குகளையும் அவர்தான் பார்த்துக்கொண்டார். நாங்கள் பிரிந்தபின், அந்தக் கணக்குகளின் பாஸ்வேர்டை நான் மாற்றவில்லை. ரிதேஷ் அதை மாற்றிவிட்டார். அனைத்துக் கணக்குகளிலும் அவர் பெயரையும் போன் நம்பரையும் சேர்த்துள்ளார். இன்ஸ்டாகிராம் மூலம் சம்பாதித்து வந்தேன். அதை அவர் ஹேக் செய்துவிட்டார்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “என் மின்னஞ்சலில் இருந்து சேனல் ஒன்றிற்கு தவறாகத் தகவல் அனுப்பி இருக்கிறார். அதன் மூலம் எனக்கும் அந்த சேனலுக்குமான உறவைக் கெடுக்க முயற்சிக்கிறார். இன்ஸ்டாகிராமில் அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். சுமுகமாகப் பிரிந்துவிட்டதால் என்னைப் பழிவாங்க மாட்டார் என்று நினைத்தேன். ஆனால் பழிவாங்குவதற்காக இப்படி செய்கிறார். ‘உன்னைத் தொலைத்துவிடுவேன்’ என அப்போது சொன்னார். அதோடு பீகார் நீதிமன்றத்தில், என் மீது 10 வழக்குகளைத் தொடுத்து வாழ்க்கை முழுவதும் அலையவிடுவதாகவும் மிரட்டுகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.