தனுஷின் படம் திட்டமிட்டபடி வெளியாகும்... சிம்பு படம் தள்ளிப்போகிறது..!!  

 

தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி வரும் ‘வாத்தி’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார் தனுஷ். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் உருவாகும் இப்படத்தில் சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்துள்ளார். சாய்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் வாத்தியராக தனுஷ் நடித்துள்ளார்.

இந்த படம் டிசம்பர் 2-ஆம் தேதி வெளியாகும் என்று தகவல் வெளியாகின. ஆனால் திட்டமிட்டபடி பணிகள் நிறைவுபெறாததால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் இப்படம் திட்டமிட்டபடி டிசம்பர் 2-ஆம் தேதியே வெளியாகும் என தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

‘சில்லுன்னு காதல்’ படத்தின் இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் ‘பத்து தல’ படத்தில் சிம்பு தற்போது நடித்து வருகிறார். கன்னடத்தில் சூப்பர் ஹிட்டடித்த 'முஃப்தி' படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் சிம்புடன் இணைந்து கௌதம் கார்த்திக்கும் நடிக்கிறார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார்.  இவர்களுடன் டீஜே அருணாச்சலம், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

 இந்த படம் டிசம்பர் 23-ஆம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் திட்டமிட்டப்படி இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெறாததால் ரிலீசை தள்ளி வைக்க படக்குழு முடிவு செய்துள்ளது. சிம்புவின் பிறந்தநாளையொட்டி வரும் பிப்ரவரி 3-ஆம் தேதி இப்படம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.