பிரபல நடிகர் மகேஷ்பாபுவின் தந்தை காலமானார்... திரையுலகினர் இரங்கல்..!!  

 

நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் நடிகர் கிருஷ்ணா. 50 ஆண்டுகளாக தெலுங்கு சினிமாவில் இருந்த இவர், 350-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து சூப்பர் ஸ்டாராக வலம் வந்தார். 1961-ல் வெளியான குல கோத்ராலு படத்தின் மூலம் திரைப்பட வாழ்க்கையை தொடங்கினார். தொடர்ந்து படண்டி முந்துக்கு, பருவு பிரதிஷ்டை போன்ற படங்களில் சிறு வேடங்களில் தொடங்கினார்.

1965-ம் ஆண்டு தேனே மனசுலு படத்தின் மூலம் முன்னணி நடிகராக அறிமுகமானார். தெலுங்கு திரைப்படத் தொழிலில் முதல் ஈஸ்ட்மன் வண்ணப்படமான ஈனாடு , முதல் சினிமாஸ்கோப் படமான அல்லூரி சீதாராம ராஜு, முதல் 70 மிமீ படமான சிம்காசனம், முதல் டிடிஎஸ் போன்ற பல தொழில்நுட்ப முதன்மைகளை தயாரித்த பெருமை இவருக்கு உண்டு. வீர லெவரா என்றப் படம் கௌபாய் வகையை தெலுங்கு திரையில் அறிமுகப்படுத்துகிறது.

இவர் தெலுங்கு உளவு திரைப்படத் தொடர்களான குடாச்சாரி 116, ஜேம்ஸ் பாண்ட் 777, முகவர் கோபி, ரகசிய குடாச்சாரி மற்றும் குடாச்சாரி 117 போன்றப் படங்களில் நடித்த்துள்ளார். இவர் இயக்கிய சங்காரவம், முகுரு கொடுக்குலு, கொடுக்கு தீதினா கபுரம், பாலா சந்திரடு மற்றும் அண்ணா தம்முடு ஆகிய படங்களில் தனது மகன் மகேஷ் பாபுவை முக்கிய வேடங்களில் நடிக்க வைத்தார். 17 படங்களை இயக்கியுள்ள இவர், பத்மாலயா பிலிம் ஸ்டுடியோவின் கீழ் பல்வேறு படங்களையும் தயாரித்துள்ளார்.

2009-ம் ஆண்டு சினிமா துறையில் ஆற்றிய பங்களிப்பிற்காக பத்ம பூசன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. 1989-ல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென வீட்டில் மயங்கி விழுந்து சுயநினைவை இழந்துள்ளார். இதையடுத்து, பதறிப்போன அவரது குடும்பத்தினர் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். அங்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. 

மருத்துவமனையில் அவருக்கு 20 நிமிடங்கள் சிபிஆர் சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு சுயநினைவு திரும்பியது. அத்துடன் செயற்கை சுவாச கருவிகள் மூலம் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலமானார்.

கிருஷ்ணாவின் மனைவி இந்திரா தேவி, மகன் ரமேஷ் பாபு ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்த சோகத்தில் இருந்த குடும்பத்திற்கு இது மேலும் துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.