பிரபல நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி காலமானார்..!!

 

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பொன்னவராயன் கோட்டையை சேர்ந்தவர் நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி. இவர் இயக்குநரும் நடிகருமான விசுவால் தமிழ் திரையுலகில் அறிமுகப்படுத்தப்பட்டார். இவருடைய முதல் படம் ‘பூந்தோட்டம்’.

இவர் விவேக் மற்றும் வடிவேல் அணியில் இணைந்து பல நகைச்சுவை காட்சிகளில் நடித்து பிரபலமான காமெடியனாக அறியப்பட்டார். பெரும்பாலும் காமெடி காட்சிகளில் தோன்றி வந்த சிவ நாராயணமூர்த்தி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, அஜித், விஜய் உட்பட பலரின் படங்களில் நடித்துள்ளார்.

200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த சிவ நாராயணமூர்த்தி திடீர் உடல்நலக்குறைவால் காலமானார். அவரின் சொந்த ஊரில் வசித்து வந்த நிலையில், அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட நேற்றிரவு 8.30 மணியளவில் உயிரிழந்தார். இவருக்கு புஷ்பவல்லி என்ற மனைவியும் லோகேஷ், ராம்குமார் என்ற மகன்களும் ஸ்ரீதேவி என்ற மகளும் உள்ளனர்.

இவரது இறுதி சடங்கு அவருடைய சொந்த ஊரான பட்டுக்கோட்டையில் இன்று மதியம் 2.00 மணிக்கு நடைபெறவுள்ளது. இதனிடையே, ஊர் மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழ் திரையுலக வட்டாரங்களில் அவரின் இறப்பு செய்தி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.