பிரபல இளம் நடிகை மரணம் ..! சோகத்தில் திரையுலகம்

 

 ஜுமுர் என்ற தொலைக்காட்சித் தொடர் மூலம் அறிமுகமானவர் ஆண்ட்ரிலா சர்மா. அதனைத் தொடர்ந்து, மகாபீத் தாராபீத், ஜிபோன் ஜோதி மற்றும் ஜியோன் கதி போன்ற நிகழ்ச்சிகளில் நடித்தார். இது தவிர அமி திதி நம்பர் 1 மற்றும் லவ் கஃபே போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இரண்டு முறை புற்றுநோயிலிருந்து மீண்டு வந்த இவர், கடந்த 20 நாட்களாக மேற்கு வங்கம் மாநிலம் ஹவுராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் இரவு அவருக்கு பலமுறை மாரடைப்பு ஏற்பட்டு பின்னர் சிபிஆர் கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த சிகிச்சை பலனளிக்காததால் நடிகை ஆண்ட்ரிலா சர்மா நேற்று மதியம் உயிரிழந்தார்.

நடிகை ஆண்ட்ரிலா சர்மா கடந்த நவம்பர் 1-ம் தேதி கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மூளைக்குள் ரத்தக்கசிவு இருப்பதைக் கண்டறிந்தனர். இதன் காரணமாக பக்கவாதம் ஏற்பட்டு அவரது உடலின் ஒரு பக்கம் செயலிழந்து கோமா நிலைக்கு சென்றார். இதையடுத்து அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

நடிகை ஆண்ட்ரிலா சர்மா மரணமடைந்த செய்தி திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகை சேர்ந்தவர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.