இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம்..!!

 

இசைஞானி இளையராஜாவின் இளைய மகன் யுவன் சங்கர் ராஜா. இவர் தனது 16 வயதில், அரவிந்தன் படத்திற்காக இசையமைத்து, தனது இசை வாழ்க்கையைத் தொடங்கினார். இதையடுத்து பூவெல்லாம் கேட்டுப்பார், தீனா, துள்ளுவதோ இளமை, நந்தா, மௌனம் பேசியதே, காதல் கொண்டேன், 7ஜி ரயின்போ காலனி, மன்மதன், ராம், பருத்திவீரன், பில்லா, மங்காத்தா என பல வெற்றி படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார்.

இதுவரை 150க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து, தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். தமிழ் சினிமாவில் "ரீமிக்ஸ்” கலாச்சாரத்தை தொடங்கி அதனை பிரபலபடுத்தியவர். சினிமாவில் வெற்றிகரமாக 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள யுவன், இன்றளவும் தமிழ் சினிமாவின் தலை சிறந்த இசையமைப்பாளராக வலம் வருகிறார். இப்போது 'லத்தி', 'நானே வருவேன்', 'லவ் டுடே' உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு சத்யபாமா பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. சத்யபாமா பல்கலைக்கழகத்தின் 31-வது பட்டமளிப்பு விழா இன்று (03.09.2022) நடைபெற்றது. இதில் யுவன் சங்கர் ராஜா மற்றும் பிரபல விஞ்ஞானி டாக்டர் வி. பாலகுரு ஆகியோருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

மேலும் டாக்டர் பட்டம் பெற்ற யுவன் ஷங்கர் ராஜாவுக்கு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.