பிரபல நடிகர் விஜய் ஆன்டனியின் தற்போதைய நிலை என்ன ?

 

‘சுக்ரன்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. அதனைத் தொடர்ந்து டிஷ்யூம், நினைத்தாலே இனிக்கும், நான அவன் இல்லை, பந்தயம் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். 2012-ல் வெளியான ‘நான்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

 

இதில் சசி இயக்கத்தில் இவர் நடித்த பிச்சைக்காரன் படம் அவரின் திரைப்பயணத்தில் முக்கிய மைல்கல்லாக அமைந்தது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது பிச்சைக்காரன் படத்தின் 2-ம் பாகத்தை விஜய் ஆன்டனியே நடித்து இயக்கி வருகிறார்.

இசையமைப்பாளர் நடிகர் என இருந்த விஜய் ஆன்டனி இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘பிச்சைக்காரன் 2’ திரைப்படம் கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படம் இந்த ஆண்டு கோடையில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்றுக் கொண்டிருந்த படப்பிடிப்பில் ஸ்கூட்டர் போட் ஓட்டும் காட்சியில் நடித்தபோது எதிர்பாரத விபத்தில் சிக்கினார். அதிவேகமாக போட்டை ஓட்டிக் கொண்டு சென்றபோது அவரது போட் திடீரென விபத்தில் சிக்கியுள்ளது. உடனடியாக நீரில் மூழ்கிய அவரை துணை ஒளிப்பதிவாளர் ஒருவர் தண்ணீருக்குள் குதித்து காப்பாற்றியுள்ளார். விஜய் ஆண்டனிக்கு நீச்சலும் தெரியாதாம். படுகாயமடைந்திருந்த அவரை உடனடியாக படக்குழுவினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட விஜய் ஆண்டனியை மருத்துவர்கள் தொடர் சிகிச்சை மூலம் அபாய கட்டத்தில் இருந்து மீட்டுள்ளனர்.

இப்போதும் சிகிச்சையில் இருக்கும் விஜய் ஆண்டனி அபாய கட்டத்தில் இருந்து முழுமையாக மீண்டுள்ளார். இருப்பினும் முகத்தில் இருக்கும் காயங்களுக்காக மேலும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கிறதாம். இதற்காக அவரை ஜெர்மனி அழைத்துச் செல்ல விஜய் ஆண்டனி குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.