ஒன்லி நடிப்பு மட்டும் தான்: நோ அரசியல்... த்ரிஷாவின் தாயார் விளக்கம்..!!

 

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. 1999-ம் ஆண்டு மிஸ் சென்னை அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், அதே ஆண்டு வெளியான ‘ஜோடி’ படத்தில் துணை நடிகையாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, அமீர் இயக்கதில் வெளியான ‘மௌனம் பேசியதே’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதன் பிறகு, ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தனக்கென தனி முத்திரை பதித்துள்ள த்ரிஷாவிற்கு வயது 40-ஐ நெருங்கினாலும் இளமை குறையாமல் அதே அழகுடன் இருக்கிறார். அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

தற்போது இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் குந்தவை தேவி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வருகிற செப்டம்பர் 30-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

இதைத்தவிர மேலும் இவர் கைவசம் தமிழில் ராங்கி, கர்ஜனை, சதுரங்க வேட்டை2 போன்ற படங்களும், மலையாளத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக ராம் எனும் படம், தெலுங்கில் பிருந்தா என்கிற வெப்தொடர் என மூன்று மொழிகளிலும் படுபிசியாக நடித்து வருகிறார்.

கடந்த சில வாரங்களாக த்ரிஷா அரசியல் கட்சி ஒன்றில் இணைந்து அரசியல்வாதியாக பொது வாழ்வில் நுழையப் போவதாக இணையத்தில் செய்திகள் வெளியாக ஆரம்பித்தன. அவரின் நண்பரான தளபதி விஜய் அவரை அரசியலில் நுழைவதற்கு ஊக்குவித்ததாகவும் சில தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் த்ரிஷாவின் தாயார் உமா கிருஷ்ணன், தனது மகள் அரசியலுக்கு வருவார் என்ற வதந்தியை மறுத்துள்ளார். மேலும், த்ரிஷா தனது நடிப்பில் பிஸியாக இருப்பதாகவும், விரைவில் அனைத்து இந்திய மொழிகளிலும் இன்னும் பல படங்களில் கமிட்டாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

எவர்கிரீன் நடிகை எந்த நேரத்திலும் தனது கரியரை மாற்ற மாட்டார் என்பதையும் உறுதி பட தெரிவித்து ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.