பாக்ஸ் ஆபிசில் ரூ.100 கோடி வசூலில் இணைந்த வாரிசு..!!

 

நீண்ட வருடங்களுக்கு பிறகு இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு விஜய் நடித்திருக்கும் ‘வாரிசு’ மற்றும் அஜித் நடித்திருக்கும் ‘துணிவு’ ஆகிய திரைப்படங்கள் கடந்த 11-ம் தேதி வெளியானது. ஒரே நாளில் 2 உச்ச நட்சத்திரங்களின் படங்கள் வெளியானதால் இருவரது ரசிகர்களும் உற்சாகம் அடைந்தனர். படம் வெளியான தியேட்டர்கள் முன்பு ரசிகர்கள் கட்-அவுட், பேனர் வைத்தும், கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர்கள், சினிமா வெளியீட்டிற்காக சென்னை, செங்கல்பட்டு, கோவை, மதுரை என மொத்தம் ஒன்பது மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றின் கீழ் 1,168 தியேட்டர்கள் உள்ளன. இதில் பொங்கலுக்கு வெளியான வாரிசு, துணிவு படங்களுக்கு சரிசமாக தியேட்டர்கள் ஒதுக்கப்படும் என தமிழ்நாட்டின் முன்னணி திரைப்பட விநியோக நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் அறிவித்திருந்தது.

இந்த இரண்டு படத்திற்கும் சுமார் 500 திரையரங்கள் வரை ஒதுக்கப்பட்டு இருந்தது. வாரிசு படம் வெற்றி பெற போகிறதா அல்லது துணிவு படம் வெற்றிபெற போகிறதா என சமூக வலைதளங்களில் ஆங்காங்கே பல சண்டை சச்சரவுகள் நடைபெற்று வந்தது.

விஜய்யின் வாரிசு படம் உலகம் முழுவதும் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. உலகளாவிய வசூல் 3-வது நாளுக்குப் பிறகு சுமார் ரூ.103 கோடியாக உள்ளது. தமிழ்நாட்டில் வாரிசு ரூ.49 கோடிக்கு மேல் வசூல் செய்து 50 கோடியை எட்ட உள்ளது. மொத்த உள்நாட்டு வசூல் மொத்தம் ரூ.78 கோடியை நெருங்குகிறது. இப்படம் வெளிநாட்டு சந்தையில் கிட்டத்தட்ட 25 கோடிகளை சம்பாதித்து 100 கோடி கிளப்பில் நுழைந்தது.