அவன் இவன் பட நாயகிக்கு திடீர் திருமணம்... திரையுலகினர் வாழ்த்து..!!

 

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் நடிகை மது ஷாலினி. இவர், 2005-ல் நடைபெற்ற மிஸ் ஆந்திரப் பிரதேசம் போட்டியில் பங்கேற்று பட்டத்தை வென்றார். டிரீம் கேர்ள் போட்டியில் வென்ற பிறகு பிரேமகதாலு என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இதையடுத்து, அல்லரி நரேஷ் நடித்த கிடகிதலு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 'பழனியப்பா கல்லூரி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை மது ஷாலினி, பின்னர் பாலா இயக்கிய 'அவன் இவன்' படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். 

அதன் பிறகு கமல்ஹாசனின் 'தூங்காவனம்' படத்திலும், சமீபத்தில் வெளியான 'விசித்திரன்' படத்திலும் நடித்தார். தற்போது சிபிராஜ் நடித்துள்ள ரேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவருக்கும் நடிகர் கோகுல் ஆனந்த் என்பவருக்கும் ஐதராபாத்தில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. கோகுல், சென்னை 2 சிங்கப்பூர், திட்டம் ரெண்டு, நடுவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இருவரும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளனர்.

கடந்த  (ஜூன் 16) ஐதராபாத்தில் எளிய முறையில் நடந்த திருமணத்தில் இருவீட்டாரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். 

இதையடுத்து தனது திருமண புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டிருந்தார் மது ஷாலினி. அவருக்கு ரசிகர்கள், திரையுலகினர் என்று பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.