பிரபல நடிகரை 12 மணி நேரம் விசாரணை செய்த அமலாக்கத்துறை ... நொந்து போன நடிகர்.!

 

 2011-ம் ஆண்டு வெளியான ‘நுவ்விலா’ படத்தின் மூலம் அறிமுகமானவர் விஜய் தேவரகொண்டா. அதன் பிறகு அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம் போன்ற படங்களின் மூலம் தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமடைந்தார்.

இந்த நிலையில், பிரபல இயக்குநரான பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவான ‘லைகர்’ திரைப்படம், கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி வெளியானது. இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. பெரும் பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமாக தயாரான இந்தப் படத்திற்கு ரூ125 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் அமெரிக்க குத்துச்சண்டை வீரர் மைக் டைசனும் நடித்து இருந்தார்.

லைகர் படம் தயாரிப்புக்காக செய்யப்பட்ட முதலீட்டில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்துள்ளது. ஹவாலா பணம் இந்தப் படம் தயாரிப்புக்காக வந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, இது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது. படத்தின் தயாரிப்பாளரான சர்மி, இயக்குநர் பூரி ஜெகன்நாத் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது.

இந்த நிலையில், நடிகர் விஜய் தேவரகொண்டாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இந்த விசாரணை நடைபெற்றது. சுமார் 12 மணி நேரம் விஜய் தேவரகொண்டாவிடம் விசாரணை நீடித்தது.

அமலாக்கத்துறை விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஜய் தேவரகொண்டா, “பிரபலம் அடைவதன் மூலம் சில பிரச்சினைகள், சில பின்விளைவுகளும் ஏற்படுகின்றன. இது ஒரு அனுபவம்.. இதுதான் வாழ்க்கை.. எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதும் நான் என் கடமையை செய்தேன். அமலாக்கத்துறை முன்பாக ஆஜராகி அவர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தேன். அவர்கள் (அமலாக்கத்துறை) மீண்டும் என்னை அழைக்க மாட்டார்கள்” என்றார்.