சீரியலில் கதாநாயகி வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பாலியல் தொல்லை..!!  

 

சின்னத்திரையில் துணை நடிகையாக நடித்து வருபவர் சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம் பெண்.இந்த நிலையில், சின்னத்திரையில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வரும் வளசரவாக்கம், ஓம் சக்தி நகர் பிரதான சாலையை சேர்ந்த காசிநாதன் (42) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் வெளியாகிய பல்வேறு சீரியல்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். அதனை பயன்படுத்திக்கொண்டு கொளத்தூரை சேர்ந்த துணை நடிகைக்கு சீரியலில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாகவும், அது குறித்து பேச தனது வீட்டுக்கு வரும்படி அழைத்துள்ளார். அதை நம்பி அங்கு வந்த பெண்ணுக்கு காசிநாதன் மது வாங்கி கொடுத்து அவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அந்த பெண்ணிடம் காசிநாதன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், அந்த பெண் அதற்கு மறுப்பு தெரிவிக்கவே அவர் வலுக்கட்டாயமாக பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண் தனது நண்பரை தொடர்பு கொண்டு, நடந்ததை தெரிவித்துள்ளார். 

இதையடுத்து அங்கு வந்த அவரது நண்பர் அந்த பெண்ணை பத்திரமாக மீட்டதுடன், வளசரவாக்கம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் காசிநாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கதாநாயகியாக வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.