மதுரை ஆதீனத்தை எச்சரித்த விஜய் ரசிகர்கள்!!

 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் விஜய். இவருக்கு தமிழ்நாட்டில் மட்டும் இல்லாமல் நாடு முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படம் வெளியானது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. தற்போது, இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் ‘தளபதி 66’ என்ற படத்தில் விஜய் நடிக்கிறார்.

இந்த நிலையில் விஜய்யின் திரைப்படங்களை பார்க்க வேண்டாம் என்று பிரபல சாமியார் பேசியிருக்கும் பேச்சு தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மதுரை பழங்காநத்தம் என்ற பகுதியில் நடைபெற்ற விஷ்வ இந்து பரிஷித் சார்பில் துறவிகள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மதுரை ஆதினம் கலந்து கொண்டு ஆவேசமாக பேசி இருந்தார்.

அப்பொழுது அவர் கூறியதாவது, நடிகர் விஜய் நடிக்கும் படங்கள் அனைத்தும் இந்து மதங்களை அவமதிப்பதாக இருக்கும் காட்சிகள் அதிகமாக இருப்பதால் அவரது படங்களைப் பார்க்க வேண்டாம் என கூறியுள்ளார். 

மேலும், கடவுளை இழிவு படுத்தி பேசுபவர்களை எதிர்த்தால் என்னை சங்கி என்று சொல்வதாகவும், சாலமன் பாப்பையாவுக்கு பல்லக்குத் தூக்கும் போது தருமபுரம் ஆதீனத்திற்கு ஏன் பல்லக்கு தூக்க கூடாது என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். 

இந்நிலையில் மதுரை ஆதீனத்தின் பேச்சைக் கண்டித்து மதுரை வடக்கு மாவட்ட இளைஞரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில், மதுரை மாநகர் முழுவதிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

அதில், ‘எச்சரிக்கை மதுரை ஆதீன மடத்தின் சொத்துகளை கொள்ளையடிக்கத் திட்டம் போடுறீங்களேயப்பா! நீங்களாம் தளபதியைப் பத்தி தப்பா பேசலாமா? வீண் விளம்பரத்திற்காக கோமாவில் எழுந்து வந்து பிதற்றுவதை நிறுத்து. எங்களுக்கு சாதி, மதம் எதுவுமில்லை. தளபதி விஜய் மேல் மக்கள் கொண்ட அன்புக்கு வானமே எல்லை' என்ற வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.

மதுரை ஆதீனத்தின் பேச்சுக்கு எதிராக விஜய் ரசிகர்கள் ஒட்டிய சுவரொட்டிகளால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், தற்போது விஜய் ரசிகர்கள் மற்றும் மதுரை ஆதீனம் இடையேயான சுவரொட்டி யுத்தம் தொடங்கியுள்ளது.