தீவிர சிகிச்சைப் பிரிவில் நடிகர் கார்த்தி..!!

 

மருத்துவர்கள் வழங்கிய ஆலோசனையை மீறி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு நடிகர் கார்த்தி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த நடிகர் கார்த்தி, தற்போது மனித உரிமைகள் காக்கும் கட்சி என்ற பெயரில் தீவிர அரசியலிலும் ஈடுபட்டும் வருகிறார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அவருடைய கட்சி போட்டியிடவில்லை. ஆனால் அதிமுக-வுக்கு ஆதரவாக தன்னுடைய பரப்புரையை அவர் மேற்கொண்டு வந்தார்.

அப்போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு கார்த்தி சிகிச்சை பெற்று வந்தார். கொஞ்சம் உடல்நலம் தேறியவுடன் போடி தொகுதியில் போட்டியிடும் ஓ.பி.எஸுக்கு ஆதரவாக பரப்புரையில் ஈடுபட்டார்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடிகர் கார்த்திக்கு மீண்டும் உயர் ரத்த அழுத்தம் மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் உடனடியாக சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.