பிரதமர் மோடியை சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த்..!

 

நடிகர் ரஜினிகாந்த் திரைத் துறையின் உயரிய விருதாக கருதப்படும் ஒன்றிய அரசின் தாதா சாகேப் பால்கே விருதை பெற்றார். டெல்லியில் நடைபெற்ற 67-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் நடிகர் ரஜினிக்கு இவ்விருதினை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வழங்கி சிறப்பித்தார்.

தமிழ் சினிமாவில் இவ்விருதினை நடிகர் சிவாஜி கணேசனும், இயக்குனர் பாலச்சந்தர் மட்டுமே பெற்றுள்ளனர். அந்த வகையில் திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை தமிழ் சினிமாவில் பெரும் மூன்றாவது நபர் ரஜினிகாந்த் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இந்நிலையில், தாதா சாகேப் பால்கே விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்த் பிரதமர் மோடியை சந்தித்தார். பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போது நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினி காந்தும் உடன் இருந்தார். அதேபோல், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தையும் நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார்.

இது தொடர்பாக ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்களையும், பிரதமர் அவர்களையும் சந்தித்து வாழ்த்துகளை பெற்றதில் பெரும் மகிழ்ச்சி” என தெரிவித்துள்ளார்.