நடிகர் யோகி பாபு மீது போலீசில் புகார்..! 

 

தமிழ் திரைத்துறையில் முன்னணி நடிகராக இருந்து வரும் யோகி பாபு மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரம் ஞாயிறன்று நடிகர் யோகி பாபு நடிப்பில் பிரபல தொலைக்காட்சியில் நேரடியாக வெளியான படம் ‘மண்டேலா’. இந்த படம் பல தரப்பினரிடையே பாராட்டுக்களை பெற்றுள்ளது. தொடர்ந்து நெட்ஃப்ளிக்ஸ் ஒ.டி.டி தளத்திலும் இந்த படம் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கத்தினர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளனர். அதில், நடிகர் யோகி பாபு டிவி-யில் ரிலீஸ் செய்யப்பட்ட மண்டேலா படத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்களை புண்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த படம் முழுவதும் இதுபோன்ற பல்வேறு காட்சிகளை பார்க்க முடிந்தது. முடிதிருத்தும் மற்றும் மருத்துவ சமுதாயத்தைச் சேர்ந்த 40 லட்சம் மக்களை இழிவுப்படுத்தும் வகையில் காட்சிகள் அமைத்து எடுக்கப்பட்டுள்ள மண்டேலா படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் மண்டேலா படத்தின் ஹீரோவாக நடித்த யோகி பாபு, படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனம், இயக்குநர் மற்றும் நடிகர் உள்ளிட்டோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகார் அனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.