இரண்டாவது திருமணம் செய்ய முடிவு? மீனா விளக்கம்.!

சமீப நாட்களாக நடிகை மீனா இரண்டாவது திருமணம் செய்துகொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றனர். இதுகுறித்து அவர் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள விளக்கம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
 

நடிகை மீனாவுக்கு கடந்த 2009-ம் ஆண்டு பெங்களூருவைச் சேர்ந்த மென்பொறியாளர் வித்யா சாகர் என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். சென்னையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நுரையீறல் தொற்று காரணமாக வித்யாசாகர் கடந்த 6 மாதங்களாக சிகிச்சைப் பெற்று வந்தார்.

எனினும் கடந்தாண்டு ஜூன் 28-ம் தேதி சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனால் ஏற்பட்ட சோகத்தில் மீனா வீட்டிலேயே முடங்கிக் கிடந்தார். இப்போது தான் அவர் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார். அண்மையில் சினிமாத்துறையில் கால்பதித்து மீனா 40 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

இதை கவுரவிக்கும் விதமாக பிரபல யூ ட்யூப் சேனல் ’மீனா 40’ என்கிற பெயரில்  அவருக்கு விழா எடுத்தது. இந்நிகழ்வில்  ரஜினிகாந்த் உட்பட தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் மற்றும் நடிகைகள் கலந்துகொண்டனர். தனது கவலைகளை எல்லாம் மறந்து, மீண்டும் மீனா சினிமாவில் நடிக்க வேண்டும் என்று அவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.  

இந்நிலையில் நடிகை மீனா விரைவில் இரண்டாவது திருமணம் செய்ய உள்ளதாகவும், விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து தனியார் ஊடகத்துக்கு மீனா அளித்துள்ள பேட்டியில், இன்னும் கணவரின் இழப்பில் இருந்து மீளவில்லை. அதற்குள் எப்படி இப்படியெல்லாம் ஒரு வதந்தி பரவுகிறது என தெரியவில்லை. இனி மகளின் எதிர்காலத்தை முன்னிறுத்தி தான் எனது வாழ்க்கை இருக்கும். சினிமாவில் நல்ல வேடங்கள் கிடைத்தால் தொடர்ந்து நடிப்பேன் என்று தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறப்படுகின்றன.