30 நாட்கள் பிணமாகவே நடித்தும் பரிகாரம் செய்யாத நடிகை..!!

படங்களில் ஒருநாள் பிணமாக நடித்தால் கூட, நடிகர் மற்றும் நடிகைகள் பரிகாரம் செய்யும் நிலையில், மொத்தம் 30 நாட்கள் பிணமாக நடித்தும் பிரபல நடிகை எதுவும் செய்யவில்லையாம்.
 

படத்தின் பெரும்பாலான காட்சிகளில் பிணமாகவே தோன்றுவது என்பது அபூர்வமானது தான். என்னதான் அபூர்வம் என்றாலும், படங்களில் பிணமாக நடிப்பவர்கள் ஒருநாள் என்றாலும் கூட, ஒரு சின்ன பரிகாரம் செய்து கொள்வார்கள்.

ஆனால் தண்டட்டி படத்தில் பிரபல நடிகை ரோகிணி 30 நாட்கள் பிணமாக நடித்துள்ளார். இதற்கு முன்னதாக ‘மகளிர் மட்டும்’ படத்தில் நாகேஷ், ‘ஏலே’ படத்தின் சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நீண்ட காட்சிகளில் பிணமாக நடித்துள்ளனர்.

அவ்விரு கதாபாத்திரங்களுமே சிறப்பாக பேசப்பட்டன. அண்மையில் வெளியான தலைக்கூத்தல் என்கிற படத்தில், துணை இயக்குநர் பிணமாக நடித்தார். அவருடைய நடிப்பும் சிறப்பாக பேசப்பட்டது. அந்த வரிசையில் படம் முழுக்க பிணமாக ரோகினி நடித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், தண்டட்டி படத்தில் ஒரு குடும்பத்தை தாங்கி நிற்கும் பெண் திடீரென இறந்துபோகிறாள். அதற்கு பின் நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் கதை. இந்த படத்தில் தண்டட்டி அணிந்து நடித்தது பெருமையாக இருந்தது. நான் பிணமாக நடித்ததில் எனக்கு கவலைகள் இல்லை. தொடர்ந்து இப்படி கதாபாத்திரங்கள் அமைந்தால், ஆர்வமுடன் நடிப்பேன் என்று ரோகிணி கூறினார்.