சென்னையில் பரபரப்பு : கில்லி பட பேனரை கிழித்த அஜித் ரசிகர்..மடக்கி பிடித்த போலீஸ்..!     

 

நல்ல திரைப்படங்கள் மீண்டும் வெளியீடு செய்யப்படும்போதும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. தரணி இயக்கத்தில் விஜய் மற்றும் த்ரிஷா நடித்த கில்லி திரைப்படம் அண்மையில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. 20 ஆண்டுகள் கடந்த போதிலும், படம் முதல் நாள்வெளியானது போல அதே வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைத்தது. மேலும், படத்தை திரையரங்கில் கொண்டாடித் தீர்த்தனர்.

கில்லி திரைப்படம் சுமார் 10 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டி சாதனை படைத்து வருகிறது. இப்படத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து, ஹிட் அடித்த படங்கள் அடுத்தடுத்து ரீ ரிலீஸ் செய்யப்படுகின்றன. அந்த வகையில், அஜித்தின் பிறந்தநாளை ஒட்டி மங்காத்தா மற்றும் தீனா திரைப்படமும் திரையரங்கில் மறுவெளியீடு செய்யப்பட்டது.

வழக்கமாக அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் மோதிக் கொள்வது வழக்கமாகும். பண்டிகை நாட்களில் அஜித் மற்றும் விஜய் படங்கள் அடுத்தடுத்து வெளியாகும் போது தல மற்றும் தளபதி ரசிகர்கள் என மோதிக் கொள்வர். நேரடியாக மட்டுமன்றி சமூக வலைதளங்களிலும் இருவரும் மோதிக் கொள்வது உண்டு. அந்த வகையில், சென்னை ஜாஃபர்கான்பேட்டை காசி திரையரங்கில் தீனா ரீ ரிலீஸ் பார்க்க வந்த ரசிகர் ஒருவர், திரையரங்கம் முன்புறம் வைக்கப்பட்டிருந்த கில்லி பட போஸ்டரை கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் காசி திரையரங்கம் முன்பு வைக்கப்பட்டிருந்த கில்லி பட பேனரைக் கிழித்த விவகாரத்தில் ஜாஃபர்கான்பேட்டையைச் சேர்ந்த அஜித் ரசிகர் எபினேஷ் என்பவரை கைது செய்தது போலீஸ்!

பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல், ஆபாசமாகப் பேசுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் எம்.ஜி.ஆர்.நகர் போலீஸ் வழக்குப்பதிவு.