‘அண்ணாத்த’ படம் திரையிடப்பட்ட திரையரங்கில் பால்சீலீங் விழுந்ததால் பரபரப்பு..!!

 

தீபாவளிக்கு ரஜினியின் ‘அண்ணாத்த’ படம் வெளியாகியுள்ளது. புதுச்சேரியில் 14 திரையரங்குகளிலும் ரஜினிகாந்த்தின் ‘அண்ணாத்த’ படம் வெளியிடப்பட்டுள்ளது.

படத்தை முதல் நாளிலேயே பார்க்க ஆர்வம் கொண்ட ரசிகர்கள் திரையரங்குகளில் அதிகாலை முதல் குவிந்தனர். முதல் காட்சி காலை 4.30 மணிக்கு திரையிடப்பட்டது. ஒவ்வொரு காட்சிக்கும் வரும் ரசிகர்கள் திரையரங்கத்திற்கு வெளியே பட்டாசு வெடித்து மேளம் தட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

‘அண்ணாத்த’ படம் திரையிடப்பட்ட அண்ணா சாலையில் உள்ள ராஜா திரையரங்கில் காலை 11.15 திடீர் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு மூலையில் பால் சீலிங் விழுந்ததால் ரசிகர்கள் அலறியடித்து வெளியே வந்தனர். இதில் யாருக்கும் காயமில்லை.

படம் முடியும் தருவாயில் இருந்ததால் உடைந்த இடத்தைத் தாண்டி நின்றுகொண்டு ரசிகர்கள் படம் பார்த்துச் சென்றனர். சில நிமிடங்களில் படம் முடிந்து விட்டது. ரசிகர்கள் அனைவரும் வெளியே வந்து விட்டனர். யாருக்கும் காயம் ஏதுமில்லை.

இதனையடுத்து திரையரங்கத்தை சுத்தம் செய்து விட்டு கட்டிடத்தின் தன்மையை உறுதி செய்த பின் அடுத்த காட்சி திரையிடப்பட்டது.