நடிகர் ரஜினிகாந்துக்கு பிரமாண்டமாக நடக்கும் பாராட்டு விழா...!! ஆனால்..!!

தொடர்ந்து 47 ஆண்டுகளாக சினிமாவில் மக்களை மகிழ்வித்து வரும் நடிகர் ரஜினிகாந்துக்கு, அவருடைய ரசிகர்கள் சென்னையில் பாராட்டு விழா நடத்த திட்டமிட்டுள்ளனர். 
 
 

தமிழ் சினிமாவின் உச்சபட்ச நடிகராக இருக்கும் ரஜினிக்கு வருகிற 26-ம் தேதி, அவருடைய ரசிகர்கள் சென்னையில் பிரமாண்டமாக பாராட்டு விழா நடத்த திட்டமிட்டுள்ளனர்.

ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி 47 ஆண்டுகள் கடந்துவிட்டன. இதை கொண்டாடும் விதமாக அவருடைய ரசிகர்கள் சார்பில் சென்னை ஒய்.எம்.சி. ஏ மைதானத்தில் வரும் 26-ம் தேதி பாராட்டு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

இதற்காக தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 10 ஆயிரம் ரசிகர்கள் நிகழ்வுக்கு வருகை தர உள்ளனர். இதற்கான சென்னை மேயர் ப்ரியாவை சந்தித்த ரஜினி ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் விழா நடத்துவதற்கான அனுமதியை பெற்றுவிட்டனர்.

அதேபோன்று சென்னை காவல் ஆணையரகத்திலும் பாராட்டு விழா நடப்பதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளதாக ரஜினி ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ள இவ்விழாவில், நடிகர் ரஜினிகாந்த் சகோதரர் சத்ய நாராயணராவ் கெய்க்வாட் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கவுள்ளார்.

 

மேலும் கலைப்புலி எஸ்.தாணு, ஏ.சி.சண்முகம், சு.திருநாவுக்கரசர், இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், பி.வாசு, கே.எஸ். ரவிகுமார், சைதை. சா.துரைசாமி உட்பட பல்வேறு திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றனர். இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பது தொடர்பாக விழா ஏற்பாட்டாளர்கள் எதுவும் தகவல் வெளியிடவில்லை.