இந்தியில் ரீமேக்காகும் ஆரண்ய காண்டம்..!

 

தமிழில் வெளியாகி மிகப்பெரிய விவாதத்தை உண்டாக்கிய ஆரண்ய காண்டம் திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படும் தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகமடையச் செய்துள்ளது.

கடந்த 2011-ம் ஆண்டு தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில், எஸ்.பி.பி. சரண் தயாரிப்பில் வெளியான படம் ‘ஆரண்ய காண்டம்’. ஜாக்கி ஷெராப், ரவி கிருஷ்ணா, சம்பத் ராஜ், யாஷ்மின் பொன்னப்பா, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர்.

தேசியளவிலுள்ள திரை ஆர்வலர்களால் கொண்டாடப்பட்ட இப்படம் ரிலீஸான போது தோல்வி அடைந்தது. ஆனால் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இப்படம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் இந்த படத்துக்காக சிறந்த அறிமுக இயக்குநருக்கான இந்திரா காந்தி தேசிய விருதை வென்றார் தியாகராஜா குமாரராஜா.

இப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தற்போது இது இந்தி மொழியில் ரீமேக் செய்யப்படுகிறது. டிப்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கான முதற்கட்ட பணிகள் அடுத்தாண்டு துவங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.