”லால் சலாம் கதை என்னுடையது” போர் கொடி தூக்கும் உதவி இயக்குநர்..!!

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘லால் சலாம்’ படத்தின் கதை என்னுடையது என உதவி இயக்குநர் ஒருவர் போர்கொடி தூக்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
 

மூன்று மற்றும் வை ராஜா வை படங்களை தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘லால் சலாம்’. இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் ஹீரோவாக நடிக்கின்றனர். ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார்.

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார். திருவண்ணாமலை சுற்றியுள்ள பகுதிகளில் இதற்கான ஷூட்டிங் நடந்து முடிந்த நிலையில், தற்போது மும்பையில் லால் சலாம் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

அங்கு ரஜினிகாந்த் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே அவருடைய கதாபாத்திரத்தின் பெயர் மொய்தீன் பாய் எனவும், அவருக்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிடப்பட்டு வைரலானது. 

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த லால் சலாம் படத்தின் ஷூட்டிங்கில் தற்போது தொய்வு ஏற்பட்டுள்ளது.  பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றி வந்த மோகன் என்பவர் லைக்காவுக்கு ஒரு கதையை சொல்லியுள்ளார். அது இரண்டு நண்பர்கள் கால்பந்து விளையாட்டில் எதிர்கொள்ளும் பிரச்னைகளை பற்றி கதையாகும்.

தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் லால் சலாம் படமும், இரண்டு நண்பர்கள் மற்றும் விளையாட்டை மையப்படுத்திய கதை தான். இதனால் தன்னுடைய கதையும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் கதையும் ஒன்று தான் என்று கூறி, உதவி இயக்குநர் மோகன் புகார் எழுப்பியுள்ளார்.

இதையடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லைக்கா நிறுவனத்திடமுள்ள மோகனின் கதையை வாங்கி படித்துள்ளார். லால் சலாம் படத்தின் கதையும் இந்த கதையும் வெவ்வேறு என்று கூறியுள்ளார். ஆனால் அதை கேட்காமல் தொடர்ந்து தனது புகாரில் மோகன் உறுதியாக உள்ளார். இதனால் லைகா நிறுவனம், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் ரஜினிகாந்த் செய்வது தெரியாமல் திகைத்துள்ளனர்.