விமர்சையாக நடந்த பிச்சைக்காரன் 2 பட பூஜை..!

 

நடிகர் விஜய் அண்டனி நடித்து இயக்கவுள்ள பிச்சைக்காரன் இரண்டாம் பாகத்திற்கான பூஜை விமர்சையாக நடந்து முடிந்துள்ளது.

தமிழில் நான் படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. அடுத்தடுத்து இவர் நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றன மற்றும் நல்ல வசூலையும் ஈட்டின.

இதனால் நிதானமாக தன்னை நடிகராக முன்னிறுத்திக்கொண்டார் விஜய் ஆண்டனி. அப்போது ‘பூ’ சசி இயக்கத்தில் வெளியான படம் தான் பிச்சைக்காரன். இது தமிழ் சினிமாவில் மெஹா ஹிட் அடித்தது. தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு, அங்கேயும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

அதை தொடர்ந்து பிச்சைக்காரன் இரண்டாம் பாகம் உருவாக்கப்படும் என்று விஜய் ஆண்டனி கூறினார். கொரோனா பரவல், ஊரடங்கு உள்ளிட்ட பிரச்னைகளால் படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் பாதிக்கப்பட்டன. தற்போது நிலைமை மீண்டும் சகஜமாகியுள்ளது.

இந்நிலையில் பிச்சைக்காரன் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது. ஏற்கனவே இந்த படத்திற்கான இயக்குநரை முடிவு செய்வதில் சிக்கல் நீடித்து வந்தது. முதல் பாகத்தை இயக்கிய சசி இந்த இரண்டாம் பாகத்தை அறிவிக்கமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து  ‘பாரம்’ படத்தை இயக்கிய பிரியா கிருஷ்ணசாமி பிச்சைக்காரன் இரண்டாம் பாகத்தை இயக்குவார் என்று கூறப்பட்டது. ஆனால் அவரும் அந்த படத்தில் இருந்து விலகிவிட்டார். தற்போது விஜய் ஆண்டனியே இயக்குநராக களமிறங்குகிறார்.

பிச்சைக்காரன் முதல் பாகம் பிளாக்பஸ்டர் என்பதால் இரண்டாம் பாகத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும் விஜய் ஆண்டனி இயக்குனராக அறிமுகமாக இருப்பதாலும் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வாரா என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.