கொரோனா 3-ம் அலைக்கு முன்பாக துவங்கப்படும் பிக்பாஸ் சிசன் 5..?
 

 

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை பரவக்கூடும் என பல்வேறு ஆய்வாளர்கள் கூறும் நிலையில், அதற்கு முன்னதாகவே பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை நடத்தி முடிக்க நிகழ்ச்சிக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் தொலைக்காட்சி பார்வையாளர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி எப்போதும் ஜூன் மாதம் துவங்கி அக்டோபர் மாதத்திற்கு நிறைவடைந்துவிடும். ஆனால் கடந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக சீசன் 5 செப்டம்பரில் துவங்கி ஜனவரியில் நிறைவுற்றது.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பரவலாக இருந்தது. தற்போது அதனுடைய தாக்கம் வெகுவாக குறைந்து வருகிறது. செப்டம்பர் மாதத்தில் கொரோனா மூன்றாவது அலை பரவக்கூடும் என ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதனால் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை விரைவில் துவங்க நிகழ்ச்சிக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல தெலுங்கு பிக்பாஸ் பணிகளும் விரைவில் துவங்குவதற்கான வேலைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

புதிய சீசனில் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிரபலங்கள் மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர். அதேபோல தடுப்பூசி போட்டுக்கொண்ட படக்குழுவினர் தயாரிப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். அதுமட்டுமில்லாமல் இந்த சீசனையும் வழக்கம் போல கமல்ஹாசன் தொகுத்து வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.