தமிழகத்தில் வைரலாகும் "மாப்பிள்ளை தேவை", "பெண் தேவை போஸ்டர்"... காரணம் இந்த சீரியலா..?

 

ஒரு விஷயத்தை பிரபலப்படுத்துவற்காக அல்லது விளம்பரப்படுத்துவற்காக சுவரொட்டிகள் ஒட்டப்படுவது வழக்கமான ஒன்று. அந்த காலம் முதல் தற்போது வரை போஸ்டர் ஒட்டும் பழக்கம் தமிழகத்தில் பரவலாக இருந்து வருகிறது.

சில சமயங்களில் சஸ்பென்ஸ் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்படுவதும் வழக்கம். சமீபத்தில் கூட நீங்க ரோடு ராஜாவா என்ற பெயரில் தமிழக காவல்துறை தரப்பில் போஸ்டர்களும் வீடியோக்களும் வெளியிடப்பட்டு இருந்தன. பிறகு தான் சாலை விதிகளை மீற கூடாது என்ற விழிப்புணர்வுக்கான விளம்பரம் என்பது தெரிய வந்தது.

அதே போல் கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் திருமணத்திற்கு மாப்பிள்ளை தேவை, திருமணத்திற்கு பெண் தேவை என்ற கேப்ஷனுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருப்பது பலரையும் திரும்பி பார்க்க வைத்தது. எதுக்குடா இந்த போஸ்டர் என்ற கேள்வியையும் எழுப்ப வைத்தது. மேலும் அந்த போஸ்டரில் QR கோட் ஒன்றும் கொடுக்கப்பட்டு இருக்க,

அதை ஸ்கேன் செய்து உள்நுழைந்தால் ஸ்கேன் செய்தமைக்கு நன்றி. மாப்பிள்ளையின் பெயர் சிவாஜி, தி பாஸ். வயது 42 எனவும் பெண்ணின் பெயர் மதுமிதா, வயது 35 எனவும் மணப்பெண் மற்றும் மணமகனின் முழு விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதற்கான பதில் கிடைத்துள்ளது.

இந்த நிலையில், குறித்த போஸ்டர் ஜீ தமிழில் எதிர்வரும் முதலாம் தேதி 7 மணிக்கு புதிதாக ஒளிபரப்பாக உள்ள 'நெஞ்சத்தைக் கிள்ளாதே' என்ற புத்தம் புதிய சீரியலுக்கான பிரமோஷன் போஸ்டர் தான் இது என தெரியவந்துள்ளது.

குறித்த சீரியலில் ஹீரோவாக ஜெய் ஆகாஷ் நடிக்கின்றார். 45 வயதாகும் அவர், உணவுப் பிரியர் என்பதால் உடல் எடை கூடி பெண் கிடைக்காமல் போகின்றது.

அதேபோல மதுமிதா என்ற கேரக்டரில் 35 வயதான பெண்ணாக ரேஷ்மா நடித்துள்ளார். இவர்களுக்குத்தான் மணப்பெண், மணமகன் தேவை.... வாங்க சேர்ந்து தேடலாம்.. என புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள்.