கவனக்குறைவால் கொரோனாவிடம் பிடிபட்ட செண்ட்ராயன்..!

 

தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் செண்ட்ராயனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு நவீன் இயக்கத்தில் வெளியான படம் ‘மூடர் கூடம்’. இதில் மிகவும் மிரட்டலான பாத்திரத்தில் நடித்து அசத்தி இருப்பார் செண்ட்ராயன். அதை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன் படத்தில் நடித்து பிரபலமானார் அவர்.

தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வந்த செண்ட்ராயன், மலையாளத்தில் மம்முட்டி மற்றும் நயன்தாரா நடித்த ‘புதிய நியமம்’ படத்தில் வில்லனாக நடித்தார். அது அவருக்கு தென்னிந்திய அளவில் மிகப்பெரிய பிரபலத்தை பெற்று தந்தது. 

பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட செண்ட்ராயன், நிகழ்ச்சியின் இறுதிக்கட்டம் வரை வீட்டுக்குள் இருந்தார். பிறகு எலிமினேட் ஆனவுடன் மீண்டும் திரைப்படங்கள் பிஸியாக நடிக்க தொடங்கினார். இந்நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர், “ வாழ்க்கையை எப்போதும் நேர்மறையாக அணுகுவது என்னுடைய வழக்கம். அதனால் கொரோனா தொற்று எனக்கு ஏற்படாது என கவனக்குறைவாக இருந்துவிட்டேன். ஆனால் இப்போது எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் வீட்டிலேயே என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டுவிட்டேன். என்னுடைய மனைவி மற்றும் குழந்தைகள் வேறு அறையில் உள்ளனர். 

அவ்வப்போது மனைவி கொண்டு வந்து தரும் உணவுகளை சாப்பிட்டு வருகிறேன். கொரோனா மிகவும் ஆபத்தான வைரஸ் என்பதை இப்போது உணர்ந்துகொண்டேன். அதனால் கொரோனா பாதிப்பு ஏற்படாமல் அனைவரையும் தற்காத்துக்கொள்ளுங்கள் என்று மிகவும் கவலையுடன் அந்த வீடியோவில் பேசியுள்ளார் செண்ட்ராயன்.