'ராக்கி' இயக்குனர் இயக்கும் அடுத்த படத்தில் தனுஷ்?

 

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வஸந்த் ரவி, ரவீனா ரவி, பாரதிராஜா, ரோஹினி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘ராக்கி’. ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன், நயன்தாரா தயாரித்துள்ள இப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படம் வெளியாவதற்கு முன்பே ‘சாணிக் காயிதம்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார் அருண் மாதேஸ்வரன். ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்துக்குப் பிறகு அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ள அடுத்தப் படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்கவுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின. தற்போது இத்தகவலை தனுஷ் உறுதி செய்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தனுஷ் கூறியுள்ளதாவது, “ஆம். ஊகங்கள் உண்மைதான். அருண் மாதேஸ்வரனின் இயக்கத்தில் அடுத்து நடிக்கப் போகும் அந்த அதிர்ஷ்டசாலி நடிகர் நான் தான். மேலதிக தகவல்கள் விரைவில்.” என்று குறிப்பிட்டுள்ளார்.