இயக்குநர் லிங்குசாமிக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனை..!!

 

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக உள்ளார் லிங்குசாமி. ஆனந்தம் படத்தின் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து ரன், சண்டக்கோழி, பீமா, பையா, வேட்டை போன்ற சூப்பர்ஹிட் படங்களை இயக்கினார். ரசிகர்கள் மத்தியில் சிறப்பான இயக்குநராக லிங்குசாமி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து சண்டக்கோழி 2, அஞ்சான் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டு நடிகர் கார்த்தி, நடிகை சமந்தா ஆகியோரது நடிப்பில், ‘எண்ணி ஏழு நாள்’ என்ற திரைப்படத்தை தயாரிப்பதற்காக, இயக்குநர் லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பிவிபி கேப்பிட்டல்ஸ் என்ற நிதி நிறுவனத்திடம் ரூ.1 கோடியே 3 லட்சம் நிதி பெற்றிருந்தது.

இந்த கடன்தொகையை திரும்பச் செலுத்தவில்லை. இதனையடுத்து பிவிபி கேப்பிட்டல்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பிவிபி நிறுவனத்திடம் பெற்ற கடனை திரும்பச் செலுத்த இயக்குநர் லிங்குசாமிக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவைத் தொடர்ந்து, இயக்குநர் லிங்குசாமி, ரூ.1 கோடியே 3 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை பிவிபி கேப்பிட்டல்ஸ் நிறுனத்திற்கு வழங்கினார். இந்த காசோலைகள் வங்கியில் போதிய பணம் இல்லாமல், திரும்பி வந்தன. இதையடுத்து, இயக்குநர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர்களுக்கு எதிராக பிவிபி நிறுவனம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் செக் மோசடி வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து 2022 ஆகஸ்ட் 22ம் தேதி தீர்ப்பளித்தது. மேலும், பிவிபி நிறுவனத்திடம் பெற்ற கடனை வட்டியுடன் சேர்த்து திருப்பி செலுத்த வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது.

சைதாப்பேட்டை நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து லிங்குசாமி தரப்பில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி அல்லி, சைதாப்பேட்டை நீதிமன்ற உத்தரவை உறுதி செய்து, லிங்குசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளார்.