விபத்தில் சிக்கிய சூரரைப் போற்று இயக்குநர்..!! ட்விட்டரில் உருக்கமான பதிவு!

 

2010-ல் வெளியான ‘துரோகி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் சுதா கொங்கரா. அதன்பின் 2016-ல் வெளியான ‘இறுதிச்சுற்று’ படத்தின் மூலம் பிரபலமடைந்தார். இதனைத் தொடர்ந்து 2020-ல் சூர்யா நடிப்பில் வெளியான ‘சூரரைப்போற்று’ படத்தை இயக்கினார். இப்படம் ரசிகர் மத்தியில் பெரும் பாராட்டுக்களையும், விருதுகளையும் பெற்றது.

தற்போது இப்படத்தின் இந்தி ரீமேக் பணிகள் நடைபெற்று வருகிறது. 'சூரரைப் போற்று' சூர்யாவின் கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகர் அக்ஷய் குமார் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் சூர்யாவுடன் இணைந்து ஒரு படத்தை இயக்கவிருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல் வெளியாகிவருகின்றன. தற்போது சூர்யா நடித்துவரும் ‘சூர்யா 42’ படத்துக்கு பிறகு சூர்யா - சுதா கொங்கரா இணையும் படம் துவங்கும் என்று கூறப்படுகிறது. இதனால் இருவரது ரசிகர்களும் மிகுந்த உற்சாகத்தில் இருந்துவருகிறார்கள்.

இந்நிலையில் சுதா கொங்கராவுக்கு படப்பிடிப்பின் போது விபத்து ஏற்ப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் சுதா கொங்கரா சமூக வலைத்தளத்தில் புகைப்படம் வெளியிட்டுள்ளார். கையில் காயங்களுடன் இருக்கும் சுதா பதிவிட்டிருப்பது, ரொம்ப வலிக்கிறது. ஒரு மாத பிரேக். இந்த மாதிரி ஒரு பிரேக்கை நான் எதிர்பார்க்கவில்லை என்று ஹேஷ்டேக்குடன் குறிப்பிட்டுள்ளார்.