அவசர அவசரமாக முடிக்கப்படும் அண்ணாத்த- எல்லாம் அவருக்காக தான்..!!
அண்ணாத்த திரைப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் சம்மந்தப்பட்ட காட்சிகள் அவசர அவசரமாக முடிக்கப்பட்டு வருகிறதாம்
சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் அண்ணாத்த. முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது. அப்போது ஏற்பட்ட கொரோனா முதல் அலை காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனால் அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
அதை தொடர்ந்து ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மீண்டும் ஹைதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பு துவங்கியது. அப்போது படக்குழுவினர் சிலருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டதால் மீண்டும் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்பினர். நடிகர் ரஜினிகாந்தும் சென்னைக்கு வந்துவிட்டார்.
பிறகு ஒரு வழியாக கொரோனாவின் தாக்கம் குறைய தொடங்கியதை அடுத்து ரஜினிகாந்த், நயன்தாரா சம்மந்தப்பட்ட காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டன. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு மீண்டும் ஹைதராபாத்தில் துவங்கிய நிலையில், ரஜினிகாந்த் தனி விமானத்தில் புறப்பட்டுச் சென்றார். தற்போது அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் முழு வீச்சில் அங்கு நடந்து வருகிறது.
இதற்கிடையில் நாடு முழுவதும் கொரோனா அலை கோர தாண்டவமாட ரஜினி தொடர்பான காட்சிகளை ஹைதராபாத்தில் அவசர அவசரமாக படமாக்கப்பட்டு வருகிறது. சில காட்சிகள் இரவு நேரத்தில் எடுக்கப்படவுள்ளதால் அதற்காக தெலங்கானா அரசின் சிறப்பு அனுமதியை படக்குழுவினர் கேட்டுள்ளனர்.
அது கிடைத்தவுடன் ஒரு வாரத்தில் அந்த காட்சிகள் நடத்தி முடிக்கப்பட்டு, ரஜினி சம்மந்தப்பட்ட காட்சிகள் முடிக்கப்படவுள்ளது. அடுத்த இரண்டு வாரத்தில் மொத்த படத்தையும் முடித்துவிட சிறுத்தை சிவா வேகமாக உழைத்து வருகிறாராம். விரைவில் படத்தை முடிக்க வேண்டும் என்கிற நோக்கில் ரஜினி உட்பட படக்குழுவினர் அனைவரும் ‘அண்ணாத்த’ படத்திற்காக கடுமையாக உழைத்து வருகிறார்கள்.