முகத்தில் ஆசிட் வீசுவேன் என மிரட்டுகிறார்.. முன்னாள் கணவர் மீது பிரபல பாடகி புகார்.!

 
பிரபல கானா இசைப் பாடகியும், பிக் பாஸ் பிரபலமுமான இசைவாணி தனது முன்னாள் கணவர் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், “கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சதீஷ் என்பவரோடு எனக்குத் திருமணம் நடந்தது. அதன்பின் கருத்து வேறுபாடு காரணமாக நாங்கள் பிரிந்துவிட்டோம். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் விவாகரத்து பெற்று விட்டேன்.

விவாகரத்தான பிறகும் சதீஷ், என்னை மனைவி என கூறிக்கொண்டு எனது புகைப்படத்தைப் பயன்படுத்தி சமூக வலைதளங்களில் போலியான பக்கங்களை உருவாக்கி மோசடியில் ஈடுபடுகிறார். சதீஷ் எனது பெயரைப் பயன்படுத்தி ஆர்கெஸ்ட்ரா மூலம் பணம் சம்பாதிக்கிறார்.

விவாகரத்துக்குப் பிறகு, சதீஷ் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வருகிறார். முன்னாள் கணவர் சதீஷ் பலரிடம் என்னை இசை நிகழ்ச்சியில் பாட வைப்பதாகக் கூறி முன்தொகை வாங்கி மோசடி செய்து வருகிறார். அவரிடம் பணம் கொடுத்தவர்கள் இசை நிகழ்ச்சிக்கு ஏன் வரவில்லை என என்னிடம் கேட்கிறார்கள்.

எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படும் சதீஷிடம் இதுகுறித்து கேட்டபோது, ‘இதைத் தொடர்ந்து செய்வேன்; முகத்தில் ஆசிட் வீசுவேன்’ என கொலை மிரட்டல் விடுக்கிறார்” என்று கூறியுள்ளார்.