பிரபல இளம் நடிகை கவலைக்கிடம்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

 

 ‘பொங்கி எழு மனோகரா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அருந்ததி நாயர். அதனைத் தொடர்ந்து ‘விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும்’ படத்தில் நாயகியாக நடித்தார். அதன்பின், விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘சைத்தான்’ படத்தில் நடித்தன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனிடையே 2018-ல் வெளியான ‘ஒட்டக்கொரு கமுகன்’ படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானர்.

தமிழ் மற்றும் மலையாளம் படங்களில் நடித்து வரும் இவர், திருவனந்தபுரம் கோவளம் அருகே சாலை விபத்தில் சிக்கினார். தனது சகோதரருடன் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்து விட்டு, திருவனந்தபுரம் கோவளம் அருகே பைக்கில் சென்றுக் கொண்டிருந்த போது வாகனம் ஒன்று மோதி விட்டு, நிற்காமல் சென்றது. சாலை ஓரத்தில் ஒரு மணி நேரமாக ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த அவரை சிலர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மூன்று வாரங்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தும் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை. தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருக்கிறார். செயற்கை சுவாசக்கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவருக்கு மருத்துவ சிகிச்சைக்காக தினமும் ரூ.2 லட்சம் செலவு ஆவதாகவும், இதுவரை ரூ.40 லட்சத்துக்கு மேல் செலவு செய்யப்பட்டு விட்டதாகவும் குடும்பத்தினர் தெரிவித்து உள்ளனர். திரையுலகினர் நிதி உதவி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.