ரசிகர்கள் நெகிழ்ச்சி..! 7 வருடங்களாக சொன்ன சொல்லை காப்பாற்றும் எஸ்கே..! 

 

 2018 ஆம் ஆண்டு புற்றுநோய் காரணமாக நெல் ஜெயராமன் காலமானார். பாரம்பரிய நெல் விதைகளை மீட்டெடுத்த இவரின் சிகிச்சை செலவுகளை கவனித்து வந்தார் எஸ்கே. அத்துடன் அவரது மகன் ஸ்ரீனிவாசனின் படிப்பு செலவுகளையும் ஏற்றுக் கொண்டார். இந்நிலையில் தொடர்ந்து ஏழு வருடங்களாக தான் சொன்ன சொல்லை நடிகர் சிவகார்த்திகேயன் காப்பாற்றி வருவதாக இயக்குனர் இரா. சரவணன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் பகிர்ந்துள்ள பதிவில், "அண்ணன் நெல் ஜெயராமன் மறைந்த சமயத்தில் அவருடைய மகனின் படிப்பு செலவை ஏற்றுக் கொள்வதாக சிவகார்த்திகேயன் தம்பி கூறினார். இப்படி கூறுகிறவர்கள் அந்த சமயத்தில் உதவி செய்வார்கள். அடுத்தடுத்த ஆண்டுகளில் நாம் நினைவுப்படுத்தினால், கொஞ்சம் சலிப்பு காட்டி, பின்னர் மறந்தே போகவும் வாய்ப்புண்டு.

ஆனால் சொன்ன வார்த்தையை கடந்த ஏழு ஆண்டுகளாக காப்பாற்றி வருகிறார். நெல் ஜெயராமன் மகன் சீனிவாசனின் படிப்பு செலவை தம்பி சிவகார்த்திகேயன் கவனித்து வருகிறார். பணம் கட்டுவதோடு தனது பொறுப்பு முடிந்துவிட்டது என்று இல்லாமல், தேர்வு சமயத்தில் போன் செய்து அக்கறையுடன் விசாரிப்பார். அன்பாக பேசுவார். சீனிவாசன் இந்தாண்டு கல்லூரி படிப்பில் அடியெடுத்து வைக்க இருக்கிறார். என்ன படிக்க போகிறார், எந்த கல்லூரி போன்ற விவரங்களை எல்லாம் விசாரித்தார். பின்னர் கோவை கற்பகம் கல்லூரியில் பேசி சீனிவாசனை சேர்த்துள்ளார் சிவகார்த்திகேயன்.

மகன் சீனிவாசனின் படிப்புக்கு நெல் ஜெயராமன் உயிரோடு இருந்தால் என்னவெல்லாம் செய்து இருப்பாரோ, அதற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் செய்து வருகிறார் சிவகார்த்திகேயன். நெல் ஜெயராமன் அப்பலோ மருத்துவமனையில் இருந்த சமயத்தில், பாண்டிச்சேரி படப்பிடிப்பில் இருந்து ஓடி வந்து அவருடைய கைகளை பற்றி 'நானிருக்கிறேன் அண்ணா' என்றார் சிவகார்த்திகேயன். அந்த காட்சி அப்படியே நெஞ்சுக்குள் விரிகிறது. நம்பிக்கையாகவே நின்று காட்டும் தம்பிக்கு நன்றி". இவ்வாறு தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார் இரா. சரவணன்.


அவரின் இந்த பதிவு சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து சிவகார்த்திகேயனின் இந்த நெகிழ்ச்சியான செயலுக்கு பலரும் நன்றி தெரிவித்து கொண்டிருக்கின்றனர். இதனிடையில் எஸ்கே நடிப்பில் உருவாகி வரும் மதராஸி படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி வரும் இப்படத்தில் ருக்மணி வசந்த், வித்யூத் ஜம்வால், விக்ராந்த், பிஜு மேனன் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். மதராஸி படம் வரும் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் ரிலீசாக இருக்கிறது.

 


இதனிடையில் சிவகார்த்திகேயன் பராசக்தி என்ற படத்திலும் நடித்து வருகிறார். சுதா கொங்கரா இயக்கும் இப்படத்தில் முதன்முறையாக வில்லனாக நடிக்கிறார் ரவி மோகன். மேலும் அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோரும் முக்கியமான ரோலில் இந்த படத்தில் நடிக்கிறார்கள். தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு சொந்தமான இடத்தில் அமலாக்கத்துறை சோதனை நடந்த காரணத்தால் பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் இப்படத்தின் பணிகள் மீண்டும் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.