ரசிகர்கள் அதிர்ச்சி...! எதிர்நீச்சல் சீரியல் நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து காலமானார்! 

 

நடிகர் பிரசன்னா நடித்துள்ள கண்ணும் கண்ணும், நடிகர் விமல் நடித்துள்ள புலிவால் ஆகிய படங்களை இயக்கியுள்ளார் மாரிமுத்து. பரியேறும் பெருமாள், விக்ரம், ஜெயிலர், வாலி, உதயா, கொம்பன், மருது உள்ளிட்ட 50- க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடிகர் மாரிமுத்து நடித்துள்ளார்.

இயக்குநராகவும், நடிகராகவும் வலம் வந்த மாரிமுத்து, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியல் மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். குறிப்பாக அவரது, ‘ஏய்... இந்தம்மா’ வசனம் இணைய உலகத்தில் மிகப்பிரபலம்.மறைந்த நடிகர் மாரிமுத்து தனது ஆரம்ப காலங்களில் வைரமுத்துவிடம் உதவியாளராக பணிபுரிந்தவர். பிறகு இயக்குநர் வஸந்திடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். இயக்குநர் சீமானிடமும் உதவி இயக்குனராகப் பணியாற்றிய மாரிமுத்து, அதன் பின்னர், ' கண்ணும் கண்ணும்’, ' புலிவால்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

இன்று (செப்.08) காலை எதிர்நீச்சல் சீரியலுக்காக டப்பிங் முடித்துக் கொண்டு, சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்திற்கு வந்துள்ளார். அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அண்மையில் தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.