ஆக்‌ஷய் குமார் படத்துக்கு விவசாயிகள் எதிர்ப்பு..! காரணம் இதுதான்..!

 

பஞ்சாப் மாநிலத்தில் சூரியவன்ஷி படம் வெளியான திரையரங்குகளுக்கு முன்பு விவசாயிகள் குவிந்து நடிகர் ஆக்‌ஷய் குமாருக்கு எதிராக தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்தனர்.

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘2.0’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவர் அக்‌ஷய் குமார். பாலிவுட் சினிமாவின் முன்னனி நடிகரான இவர், பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர ஆதரவாளராக அறியப்படுகிறார்.

ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் அக்‌ஷய் குமார், கத்ரீனா கைஃப் நடித்துள்ள ‘சூரியவன்ஷி’ திரைப்பட தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதையடுத்து விவசாயிகள் சிலர் ஹோஷியார்பூர் பகுதியில் இருக்கும் திரையரங்கு முன்பு நேற்று திடீரென குவிந்தனர்.

விவசாயிகள் திரண்டு அக்‌ஷய்குமார் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்று கண்டன கோஷம் எழுப்பினர். சூர்யவன்ஷி படத்தின் போஸ்டர்களை கிழித்தெறிந்தனர். தியேட்டர் அலுவலகத்திற்கு சென்று படத்தை திரையிடக்கூடாது என்றும் வற்புறுத்தினார்கள். 

மேலும் பஞ்சாபில் உள்ள  உதம் சிங் பூங்காவில் இருந்து திரையரங்கம் வரை அவர்கள் கண்டன ஊர்வலம் நடித்தனர். வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை நடிகர் அக்‌ஷய் குமார் திரைப்படங்களை திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று  அவர்கள் போராட்டங்களில் முழக்கங்களை எழுப்பினர்.