நடிகர் ஜெய் பட பெயரில் மோசடி- இயக்குநர் கோபி நயினார் மீது புகார்..!!

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இலங்கைப் பெண் இயக்குநர் கோபி நயினார் மீது பண மோசடி புகார் தெரிவித்துள்ள சம்பவம் சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

நயன்தாரா நடிப்பில் வெளியான ‘அறம்’ படத்தை இயக்கியவர் கோபி நயினார். அவர் மீது பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் இலங்கைப் பெண்ணான சியாமளா யோகராஜா என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பண மோசடி புகார் அளித்துள்ளார்.

அறம் படத்துக்கு பிறகு ஜெய் நடிப்பில் ‘கருப்பர் நகரம்’ என்கிற பெயரில் கோபி நயினார் படம் இயக்குவதாக இருந்தது. அதற்கு பூஜை கூட நடத்தப்பட்டது. ஆனால் ஷூட்டிங் துவங்கப்படவில்லை. இதுதெரியாமல் ஒரு பட அதிபரின் பேச்சைக் கேட்டு கருப்பர் நகரம் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக சியாமளா யோகராஜாவும் இணைந்துள்ளார்.

அதற்காக அவர் ரூ. 30 லட்சம் படக்குழுவுக்கு தந்ததாகவும், கிடைக்கும் லாபத்தில் 25 சதவீதம் அவருக்கு படக்குழு தர வேண்டும் எனவும் ஒப்பந்தம் போடப்பட்டது. இதையடுத்து சியாமளா பிரான்ஸ் போய்விட்டார். ஆனால் கருப்பர் நகரம் படத்துக்கான பணிகள் எதுவுமே நடக்கவில்லை. 

இதுகுறித்து அவர் கேட்டபோது படத்தை நிறுத்துவிட்டதாகத் கூறியுள்ளனர். உடனடியாக சியாமளா பணத்தை திருப்பி கேட்டுள்ளார். அதை தொடர்ந்து அவரிடம் படக்குழு யாரும் செல்போனில் பேசுவது கிடையாது. இதனால் தான் ஏமாந்துவிட்டதை அறிந்து, சியாமளா கோபி நயினார் உள்ளிட்ட படக்குழுவினர் மீது புகார் அளித்துள்ளார்.