கௌதம் மேனன், ஏ.ஆர்.ரஹ்மான், சிம்பு கூட்டணியில் 2 படங்கள்... விண்ணை தாண்டி வருவாயா-2 வெளிவருமா..?

 

வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் சிம்பு கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் சிங்கிள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. யுவன் சங்கர் ராஜா பாடியிருக்கும் இந்தப் பாடலை யுவனின் கம்பேக்காக ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர். உடல் எடையைக் குறைத்து இந்தப் படத்தில் சிம்பு நடித்துள்ளதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், சிம்புவின் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் மற்றொரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. கௌதம் மேனன், சிலம்பரசன், ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் உருவாக இருக்கிறது.

இவர்கள் கூட்டணியில் உருவான விண்ணை தாண்டி வருவாயா திரைப்படம் தமிழ் திரையுலகில் முக்கியமான காதல் படமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து உருவான அச்சம் என்பது மடமையடா தோல்வியை சந்தித்தாலும் இவர்களுக்கான எதிர்பார்ப்பு திரைத்துறையிலும் இளைஞர்கள் மத்தியிலும் அதிகமாகவே உள்ளது.

இந்நிலையில் சிலம்பரசன், கௌதம் வாசுதேவ் மேனன், ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் உருவாக இருப்பதாக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

இந்த தகவல் ரசிகர்களை உற்சாகம் அடைய செய்துள்ளது. சிலம்பரசன் உடல் எடையை குறைத்து வசீகரமாக காட்சியளிப்பது புதிய படங்களுக்கு கூடுதல் ப்ளசாக இருக்கும் என ரசிகர்கள் பேசத் தொடங்கியுள்ளனர். அதேநேரம் இந்த படங்கள் காதல் படமாக இருக்குமா அல்லது ஆக்சன் படமாக இருக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.