பிரபல நடிகருக்காக ரிஸ்க் எடுத்துள்ள ப்ரியாமணி- விரிவான தகவல் இதோ..!
தெலுங்கில் முன்னணி நடிகருடன் முக்கியமான படத்தில் மிகவும் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளதாக தேசிய விருது வென்ற நடிகை ப்ரியாமணி தெரிவித்துள்ளார்.
பெங்களூருவைச் சேர்ந்த தொழிலபதிபரை திருமணம் செய்துகொண்ட பின்பு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் ப்ரியாமணி. தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் வேற்று மொழி படங்களில் அதிகளவில் நடித்து வருகிறார்.
அவருடைய நடிப்பில் உருவாகியுள்ள ‘தி ஃபேமிலி மேன்’ சீசன் 4 மீது இந்தியாவே மிகுந்த எதிர்பார்ப்பை வைத்துள்ளது. இந்நிலையில் தெலுங்கில் நடிகர் வெங்கடேஷுடன் நடுத்தர வயதுகொண்ட பெண்மணி கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறித்து அவர் மனம் திறந்துள்ளார்.
அதில், நாரப்பா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளேன். நடிகர் வெங்கடேஷுடன் நடிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தேன். அதன்படி கிடைத்த இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டேன். நாரப்பா படத்தில் நடுத்தரவ் வயது பெண்ணாக, 20 வயது மகனுக்கு தாயாக ரிஸ்க் எடுத்து நடித்துள்ளேன் என்று கூறினார்.
கடந்த 2019-ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான படம் அசுரன். வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் நடித்ததற்காக தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனுடைய அதிகாரப்பூர்வ தெலுங்கு ரீமேக் தான் நாரப்பா.
இதில் நடிகர் தனுஷ் நடித்த சிவசாமி கதாபாத்திரத்தில் வெங்கடேஷ் நடித்துள்ளார். அதன்படி அவருடைய மனைவி மஞ்சு வாரியார் நடித்த கதாபாத்திரத்தில் ப்ரியாமணி நடித்துள்ளார். மேலும் சிரஞ்சீவி நடிக்கும் ‘லூசிஃபர்’ தெலுங்கு ரீமேக்கில் நடிக்கவும் ப்ரியாமணியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.