ஜகமே தந்திரம் படத்தால் எனக்கு வேதனை: தனுஷ்

 

இதுவரை ஜகமே தந்திரம் படம் குறித்து எந்தவொரு கருத்தையும் கூறாமல் இருந்து வந்த தனுஷ், தற்போது முதன்முறையாக அப்படம் தொடர்பாக ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளது கவனமீர்த்து வருகிறது. 

கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜகமே தந்திரம்’. கடந்தாண்டே இப்படத்திற்கான தயாரிப்பு பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு விட்டன. ஆனால் கொரோனா பரவல் காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது.

அதை தொடர்ந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போது, தனுஷ் நடித்த கர்ணன் படம் வெளியானது. அதனால் மேலும் தாமதத்தை விரும்பாத தயாரிப்பு நிறுவனம் ஜகமே தந்திரம் படத்தை ஓடிடியில் வெளியிடும் அறிவிப்பை வெளியிட்டது.

இதனால் படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், கதாநாயகன் தனுஷ் ஆகியோருக்கு அதிருப்தி ஏற்பட்டது. நடிகை தனுஷ் படத்தை திரையரங்குகளில் வெளியிட கோரிக்கை விடுத்தும் தயாரிப்பு நிறுவனம் ஓடிடி வெளியீட்டை உறுதி செய்து அறிவிப்பு வெளியிட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக மவுனம் காத்து வந்த நடிகர் தனுஷ், தற்போது மவுனத்தை கலைத்துள்ளார். நேற்று ஜகமே தந்திரம் பட டிரெய்லர் வெளியானது. அதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், ஒரு அற்புதமான திரையரங்க அனுபவமாக இருந்திருக்க வேண்டிய படம், நெட்பிளிக்ஸ் தளத்துக்கு வருகிறது. இருந்தாலும், நீங்கள் அனைவரும் 'ஜகமே தந்திரம்' மற்றும் சுருளியை ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன் என்று தனுஷ் தெரிவித்துள்ளார்.

தமிழக ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ள ஜகமே தந்திரம் வரும் 18-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.