கடன் வாங்கி நடத்தும் ஆட்சி நல்ல ஆட்சியா? கோவையில் நடிகர் ரஞ்சித் பேட்டி..!

 

கோவை கோனியம்மன் கோவிலில் கவுண்டம்பாளையம் திரைப்பட குழுவினர் வழிபாடு நடத்தினர். வழிபாட்டிற்கு பின்னர் நடிகர் ரஞ்சித் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கவுண்டம்பாளையம் திரைப்படம் ஜூலை 5ல் வெளியாகிறது. நாடக காதலை மையப்படுத்தி விழிப்புணர்வு படமாக எடுக்கப்பட்டுள்ளது. கோவை பகுதியை சுற்றி இந்த படத்தை எடுத்துள்ளோம்.

பணக்கார பிள்ளைகளை குறிவைத்து தாக்குதல் நடத்துவதும் நாடக காதல் தான். இதனால், வரதட்சணை கொடுமை, கொலை, தற்கொலை போன்றவை நடைபெறுகின்றது.

சுயமரியாதை திருமணம் என சொல்லி எவ்வளவு கொடுமை நெல்லையில் நடந்துள்ளது. சுயமரியாதை திருமணத்தை நிறுத்த வேண்டும். சமூக நீதி பேசினால் எனக்கு கடும் கோபம் வரும்.

சுயமரியாதை, சமூக நீதி பேசுபவர்கள் முதலில் அவர்கள் குழந்தைகளுக்கு இதுபோன்று திருமணம் செய்து வைப்பார்களா? பெற்றோர் கையெழுத்து இல்லாமல் திருமணம் நடக்க கூடாது. அப்படிப்பட்டசட்டம் கொண்டு வர வேண்டும்.

இதற்காகவே சில கும்பல் அலுவலகம் அமைத்து வேலை செய்கிறார்கள். நான் நாடக காதல் என்று சொல்லும் போது மட்டும் என்னை சாதி வெறியனாக பார்க்கிறார்கள். ஆம் நான் ஜாதி வெறியன் தான்.

கள்ளுகடையை திறக்க வேண்டும்.. கள்ளுகடையில் வருமானம் இல்லாத காரணத்தினால் இவர்கள் அதனை விரும்புவதில்லை. மதுவை வைத்து தான் தமிழகத்திற்கு வருமானம். இதுதான் தொழில் வளர்ச்சியா?

என் படத்தின் மீது கோபம் வந்தால் அவர்களும் நாடக காதலை ஆதரிப்பவர்கள் என்று அர்த்தம். அரசியல் கட்சி ஆரம்பிக்க திட்டமில்லை, சேரவும் திட்டமில்லை. கள்ளச்சாராயம் விற்பவர்கள் சேர் பிடித்து சட்டமன்றத்தில் அமர்ந்துள்ளனர்.

கடன் வாங்கி நடத்தும் ஆட்சி நல்ல ஆட்சியா? நாளை தலைமுறை  காப்பாற்ற அரசியல் மாற்றம் வேண்டும். தேர்தல் வந்த காரணத்தினால் அரசியல் கட்சியினர் போட்டி போட்டு பணம் கொடுக்கின்றனர்.

சாலை திரும்பும் இடங்களில் டாஸ்மாக் திறக்கப்பட்டுள்ளது. மது ஸ்லோ பாய்சன். கள்ளச்சாராயத்தை இவர்களால் ஒழிக்க முடியாது. இந்த திருடர்கள் நமக்கு வேண்டாம்.

இவ்வாறு ரஞ்சித் பேசினார்.