வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வருகிறாரா நடிகர் பிரபாஸ் ?

 

2002-ல் வெளியான ‘ஈஸ்வர்’ படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் பிரபாஸ். அதனைத் தொடர்ந்து வெளியான ‘வர்ஷம்’ படத்தின் மூலம் பிரபலமானார். மிர்ச்சி, முன்னா, டார்லிங், மிஸ்டர். பெர்ஃபெக்ட் உள்ளிட்ட திரைப்படங்கள் இவரது வெற்றிப் படங்கள். இதனைத் தொடர்ந்து ராஜமௌலி இயக்கிய ‘பாகுபலி’ படத்தின் மூலம் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமானார்.

தற்போது, கே.ஜி.எஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கி வரும் ‘சலார்’, நாக் அஸ்வின் இயக்கும் ‘புராஜக்ட் கே’, மாருதி இயக்கும் படங்களில் நடித்து வருகிறார். அவர் நடித்துள்ள ‘ஆதிபுருஷ்’, ஜுன் 16-ம் தேதி வெளியாக இருக்கிறது. 

இந்த நிலையில் நடிகர் பிரபாஸுக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக ‘சலார்’ படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சிகிச்சைக்காக அவர் வெளிநாடு சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து அதிகாரபூர்வமான விளக்கம் இல்லை.

கடந்த பிப்ரவரி மாதமும் அவர் உடல் நலக்குறைவு காரணமாக படப்பிடிப்பை நிறுத்திவிட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டதாகக் கூறப்பட்டது. அவர் ஓய்வெடுக்காமல் தொடர்ந்து நடித்து வருவதால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அவரது ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். விரைவில் நலம் பெற வேண்டி வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.