உங்களுடைய தவறு எதுவும் இல்லை... மாற்றுத்திறனாளியை நேரில் சந்தித்து மன்னிப்பு கூறிய நாகர்ஜுனா..!

 

நடிகர் நாகர்ஜுனா, தனுஷ் நடிக்கும் குபேரா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகின்றது. இதில் கலந்து கொள்வதற்காக கடந்த வாரம் நடிகர் நாகர்ஜுனா மற்றும் தனுஷ் உள்ளிட்ட பட குழுவினர் மும்பை விமான நிலையத்திற்கு வந்தனர்.

இதன்போது விமான நிலையத்தில் உள்ள கடைகளில் வேலை செய்யும் மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவர், நடிகர் நாகர்ஜுனாவை பார்த்ததும் அவருக்கு கை கொடுக்க விரைந்து வந்தார். ஆனால் அங்கிருந்த நாகர்ஜுனாவின் பாதுகாவலர்கள் அவரை தள்ளி விட்டு சென்றனர்.

இதனை நாகர்ஜுனா கவனிக்கவில்லை. பின்னால் வந்த தனுஷும் கவனிக்கவில்லை. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வைரலானது. அத்துடன் நாகர்ஜுனா மீதும் கண்டனங்கள் வலுத்து வந்தது.

இந்த நிலையில், இன்றைய தினம் நாகர்ஜுனா தனது பாதுகாவலர்களால் தள்ளிவிடப்பட்ட மாற்றுத்திறனாளியை நேரில் சந்தித்து மன்னிப்பு கூறியதுடன் அன்று நடந்ததில் உங்களுடைய தவறு எதுவும் இல்லை என கூறியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும், குறித்த ரசிகருடன் நன்றாக பேசி புகைப்படம் எடுத்துக்கொண்டார். தற்போது இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.