மீண்டும் இணையும் ‘அடங்க மறு’ பட கூட்டணி..!!

அடங்க மறு படத்தின் மூலம் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான கார்த்திக் தங்கவேல், தற்போது மீண்டும் நடிகர் ஜெயம் ரவி உடன் இணைந்து இரண்டாவது படத்தை இயக்கவுள்ளார்.
 

ஹோம் மீடியா நிறுவனம் சார்பில் 2018-ம் ஆண்டு வெளியான படம் ‘அடங்க மறு’. ஜெயம் ரவி, ராஷி கண்ணா, பூர்ணா, சம்பத் ராஜ், பாபு ஆண்டனி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சாம் சி.எஸ் இசையமைத்த இந்த படத்தை ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் சொந்தமாக தயாரித்தார். 

இந்த படமும் வெளியாகி பார்வையாளர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றது. படத்தின் இருந்த சில காட்சிகள் இன்றும் ஷார்ட் வீடியோ செயலிகளில் டிரெண்டிங்கில் இருந்து வருகின்றன. முதல் படத்தை சிறப்பாக இயக்கி காட்டிய கார்த்திக் தங்கவேலுக்கு பாராட்டுக்களும் குவிந்தன. 

இந்த படத்தை தொடர்ந்து விஷால், ஆர்யா, கார்த்தி உள்ளிட்டோருக்கு கார்த்திக் தங்கவேல் கதை சொல்லி இருந்தார். ஆனால் அவர்கள் யாரும் படத்தை உறுதி செய்யவில்லை. இதனால் மீண்டும் ஜெயம் ரவியை சந்தித்து கதை சொல்லியுள்ளார் கார்த்திக் தங்கவேல்.

அந்த கதை ஜெயம் ரவிக்கு பிடித்ததை அடுத்து, விரைவில் படத்துக்கான ஷூட்டிங் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தையும் அடங்க மறு போலவே ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் தயாரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.