அண்ணாத்த படத்துக்கு பிறகு டிவி சீரியலில் களமிறங்கும் குஷ்பு..!

 

'சிறுத்தை’ சிவா இயக்கத்தில் ரஜினியுடன் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வரும் குஷ்பு, அடுத்ததாக தொலைக்காட்சி தொடரில் நடிக்க தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் நடிகை குஷ்பு. எனினும் தொடர்ந்து அரசியல் அரங்கில் தீவிரமாக இயங்கி வருகிறார்.

அதை தொடர்ந்து அவர் அண்ணாத்த படத்தில் நடிக்கும் தகவல்கள் வெளியாகின. ஹைதராபாத் மற்றும் சென்னை நகரங்களில் நடைபெற்ற அண்ணாத்த பட படப்பிடிப்பில் தொடர்ந்து பங்கேற்றார். அவருடைய காட்சிகள் முடிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த படத்தில் ரஜினிகாந்த் கதாபாத்திரத்தை எதிர்க்கும் வில்லி கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. ரஜினிக்கு ஜோடியாக மீனாவும், அவருடைய தங்கையாக கீர்த்தி சுரேஷும் நடித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்த குஷ்பு இனிமேல் சினிமா மற்றும் நடிப்பு வேண்டாம் என்கிற மனநிலையில் இருந்தார். ஆனால் அண்ணாத்த படத்துக்கு பிறகு மீண்டும் அவர் படங்களில் நடிக்க ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளார்.

அதில் முதல் முயற்சியாக மீண்டும் தன்னுடைய கவனத்தை சீரியல் பக்கம் திருப்பியுள்ளார். தொலைக்காட்சி மெகா தொடரில் நடித்து, அதன் மூலம் கிடைக்கும் பிரபலத்தை அரசியலில் பயன்படுத்த குஷ்பு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.